Monday, February 9, 2009


என்னுள்ளான நேசம்

முன்னெப்போதும் நிகழ்ந்திரா இக்கணத்தில்
என்னுள்ளுறைகிறது
அவ்விருப்பம்.

தருணங்களனைத்திலும் கடிந்துகொண்டவாறே
நீண்டு
நெடிந்தேயிருக்கிறது

எனதுள்ளத்தினுள்
தாழிட்டுக்கொண்டும்

வெளிவர
மறுத்தபடியும்
அடைக்காக்கும்
அந்நேசம்.


பேரோசை எழுப்பியபடி அனுமானிக்கிறது

நடுங்கிப் பிளவுற்றிருக்கும்
எனதந்த
மனதினுள்ளுயரும் புன்னகை நெருக்கடிக்குள்ளான பொழுதொன்றில்.

பிறிதொருவரின் கரம் அரவணைக்கத் தயாராயிருப்பதாய்
அழுகிய நாற்றமெடுக்கும் பிணமொன்றை முன்னிறுத்தி
கசகசப்பும் அருவருப்புமாய் உரூப்பெறுகிறது
வெளிக்காட்டாமலிருந்த பிறர்மீதான எனதந்நேசம்.

No comments:

Post a Comment