Friday, February 13, 2009

நேயத்தின் சுவடுகள்

நுனிப்புல் மேயும் அக்கன்றென‌
விரைந்து புரட்டுகிறேன்
உனதெழுத்தைத் தாங்கிய குறிப்பேடொன்றை.

சட்டென இடரி வீழ்ந்து
சொற்கள் சொட்டும் அப்பக்கத்தை
கூர்நோக்கி பார்க்கிறது எனதந்த பார்வை.

பிரியத்துடனான உனதெதிர்பார்ப்பை
தகிப்புற்று தாங்கும்
பதங்கள் வற்றிக்கொண்டிருந்தன.
இறுகப்பற்றிக் கொண்டலையும்
உன்னுடனான நினைவுகளின் எச்சங்கள்
பற்கள் காட்டி எள்ளலோடு நகைத்தன‌
எனதிருப்பின் மீது.

நேயத்தின் சுவடுகளற்று
அன்பில்லா பாலைநிலத்தையொத்த‌
உனதிருப்பை புரிதலின்றி புறக்கணித்து
என்னுள் வியாபித்திருந்த பிரிவின் சுவடுகள்
மெல்ல இளகிக் கொண்டிருந்தது
பெய்து தீர்க்கும் மழையென.

No comments:

Post a Comment