Friday, February 13, 2009

பார்வை படிந்த கணம்

உயர்ந்தெழும்பி விழுகிறது
எனைநோக்கி விரையும் வார்த்தைகள்
''ஒற்றைக்காலில் தவமிருப்பதாக....''

எக்கணத்திலும் கவலையுற்றிருந்ததில்லை
காலத்தோடிணைந்த எனதந்த செயல்பாடுகள் குறித்துமிழும்
பிறிதொருவரின் இத்தன்மைத்தாயின சொற்சுமைகளை.

இறக்கைகள் முளைத்து
அவ்வப்போது பறக்கமுயலும்
அவ்வார்த்தைகள் குறித்த‌
யாதொன்றின் சுவடியை தாங்கிய முயற்சியையும்
முளைக்கவிடுவதில்லை என‌தாளுமை.

தப்பிப் பிழைப்புற்று விரிந்து
என்னுள்ளுறையும் அவ்வார்த்தைகளை
தவித்தொதுக்கியே பழக்கமுற்று நீடித்த‌
என‌தான இவ்வழக்கத்தை
முகத்திலறைந்தாற்படி உறைத்தது
ஊனமுற்றிருந்த தோழனொருவனின்
ஒற்றைக்கால காலணியைத் தாங்கிய வாயிலின் மீது
படிந்த எனதந்தப் பார்வை...

No comments:

Post a Comment