Tuesday, December 25, 2012
Monday, December 24, 2012
Sunday, December 16, 2012
குழந்தைகளைத்தேடும் கடவுள்
நூல் விமர்சனம்
நூல் விமர்சனம்
- எழுத்தாளர் ஐரேனிபுரம் பால்ராசய்யா
மனதைத் தொடும் ஹைக்கூ கவிதையோடு களம் இறங்கியிருக்கிறார் கவிஞர் ச.கோபிநாத். தனது குழந்தைகளைத்தேடும் கடவுள் என்ற இந்த இரண்டாவது கவிதைத்தொகுப்பு நூலின் மூலமாக பல வாசகர்களின் மனதைத் தொட்டிருக்கிறார்.
எளிமையான விஷயங்கள் கைக்கூவாய் இவரது பேனாவிலிருந்து புறப்பட்டு அது வாசகனை வந்தடையும்போது பிரமிக்க வைக்கிறது. இந்த இளைய படைப்பாளி குழந்தைகளின் வாழ்வியலை அழகாய் வடித்தாலும் சமுதாயத்தின் மீதுதான் அதிகமாய் தனது சாட்டையை சுழட்டியிருக்கிறார்.
குழந்தைகளின் கேள்விகள் ஆழமாய் கற்பித்தன புத்தகங்களில்லா உலக அறிவு
என்று குழந்தைகளைப்பற்றின அறிவுசார்ந்த கவிதைகளை வெறும் மூன்றே வரிகளில் முத்து முத்தாய் எழுதியிருப்பது நூலுக்கு மேலும் மேலும் அழகு சேர்க்கிறது.
சமுதாயப்பார்வையும் அதுசார்ந்த கவிதைகளும் நிஜங்களின் வலிகளை நியாயப்படுத்துகின்றன. உயிரினங்களின் உணர்வுகளை, பறவைகளின் ஏக்கங்களைக்கூட பதிவு செய்திருக்கிறார்.
திசை திரும்பின தாகத்துடன் பறவைகள் வறண்ட குளம்.
இப்படி முப்பது வரிகளில் சொல்லவேண்டிய விஷயங்களை வெறும் மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாய் சொல்லியிருப்பது அழகு.
வானத் தூரிகையின் வண்ண ஓவியம் அந்திப் பொழுது
என்று அந்திவானத்தின் அழகை மிகவும் அழகாய் ரசிக்கிறார்.
போதையேற்றும் அறிவியல் சாதனம் தொலைக்காட்சி
என்று சமூகத்தின் பண்பாட்டு சீரழிவுகளை அழகாகவே படம் பிடிக்கிறார் இந்த அழகிய கவிஞர் ச.கோபிநாத்.
எளிமையும் எதார்த்தமும் கொண்டு கவிதைகள் கவன ஈர்ப்பை பெறுவதால் எல்லோர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய கவிதைத்தொகுப்பு. இந்த குழந்தைகளைத் தேடும் கடவுள்.
வெளியீடு : வாசகன் பதிப்பகம்
Sunday, May 20, 2012
நூல் அறிமுகம்
குழந்தைகளைத் தேடும் கடவுள்
கலைத்திலகம், சகலகலா வித்தகர், முத்தமிழ் வித்தகர், நகைச்சுவை அரசு எனப்பல விருதுகளை இளவயதிலேயே பெற்றுள்ள கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் இரண்டாம் படைப்பாக வெளிவந்துள்ள இந்த ஹைக்கூ கவிதை நூல், தமிழிலக்கிய உலகில் தனக்கென தனியிடம் பிடிக்கும் என்பதும், பல பரிசுகளை பெறும் என்பதும் வளர்ந்த பலபடைப்பாளிகளின் கணிப்பு.
ஆங்கில ஆசிரியரான இவர் தமிழின் மீது கொண்ட தனியாக்காதலாலும் குழந்தைகளோடான தன் வாழ்வியல் அனுபவங்களைப் பதிவு செய்யும் நோக்கிலும் எழுதியுள்ள இந்நூலின் ஹைக்கூக்களுக்கு பொருத்தமான கோட்டோவியங்கள் இடம்பெற்று சிறப்பு சேர்க்கிறது "குழந்தைகளைத் தேடும் கடவுள்".
சிறப்பான வடிவமைப்பு, அருமையான ஓவியங்கள், அழகுபடுத்தும் அணிந்துரைகள் எனப்பலவற்றால் உயிர்த்தெழுகிறது இந்நூல்.
96 பக்கங்கள்
விலை ரூ. 50 -
நூல் தேவைக்கு
கவிஞர் ச.கோபிநாத்
9790231240
Friday, April 27, 2012
தவறுதலால் கிடைத்த பலன்
தூரத்து உறவினரின்
மரணச் செய்தியை
சுமந்து வந்ததாக இருக்கலாம்.
பள்ளிக் கால நண்பன்
தொடர்பைத் தேடிப் பிடித்து
அழைக்க முயன்றதாக இருக்கலாம்.
பரிசு கிடைத்திருப்பதற்காகவோ
காப்பீட்டுக்கு விளக்கம் தரவோ
கார்பரேட் கணவான்கள்
அறுக்க அழைத்ததாக இருக்கலாம்.
கவிதைகளை வாசித்த
பரந்த இதயம் கொண்ட யாரேனும்
பாராட்டுவதற்கு அழைத்ததாகவும் இருக்கலாம்.
புதிய தொடர்பெண்ணை சுமந்தபடி
அலைபேசி அழைத்துக் கொண்டிருந்த
சில நொடிகளுக்குள்
பல நூறு எண்ணங்களை
அனுமானித்துக் கொண்டிருக்கையில்
வந்த அழைப்பு
தவறிய அழைப்பு ஆகியிருந்தது.
புதிய தொடர்பொன்றை
சுமக்கத் தொடங்கியிருந்தது அலைபேசி.
ச.கோபிநாத்
நன்றி
வடக்கு வாசல்
ஏப்ரல் 2012 இதழ்
Monday, March 26, 2012
புலம்பெயர் நிலை
சுவர்கள் சூழ நாம் இருப்பினும்
அவை நமதில்லை.
உரிமை கொண்டாடப்படும் அறைகள்
நாளை வேறொருவருடையதாகிறது.
புலம்பெயர் அகதிகளாய்
இடம் மாற்றப்படும் தொட்டிச் செடிகள்
சூரியக் கதிர் தேடி அலைய நேரும்
புதிதாய் குடியமரும்
அறிமுகமில்லா முகங்களை
பார்த்து வியக்கும்
சுவர்களோடு சுவர்களாய்
ஊர்ந்துத் தேயும் பல்லிகள்
புது வீடுத் தேடும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுவர்
வீடுத் தேடி வந்தவர்களும்
தகவலளிக்கும் கடிதங்கள் சுமந்துவரும்
அஞ்சல் அதிகாரிகளும்
அவ்வப்போது பொருட்கள் சுமந்து
புது வீடுத் தேட வைக்கும்
சாமானியர்களின் வாழ்நிலையை
அடையாளிக்கும் வாடகை வீடுகள்
மெய்ப்பிக்கின்றன
இன்று நம்முடையது
நாளை வேறொருவருடையதாகலாம்
ச.கோபிநாத்
நன்றி - வடக்கு வாசல் மார்ச் 2012
Friday, February 24, 2012
வண்ண வண்ண ஆடைகளை
நவக்கிரகங்களுக்குச் சுற்றி
கோள்கள் ஒன்பதென
சூளுரைத்துச் சொன்னதிலிருந்தது
வானியல் தொலைநோக்கு.
காய்களையும் கறிகளையும்
அதனதன் பண்புணர்ந்து
சரியான சேர்ப்புடன்
சரிவிகத உணவாய் அளித்ததில்
உணவே மருந்தானது.
சுக்கும் மிளகும் திப்பிலியோடு அரைபட
வாஞ்சையோடு வழங்கப்பட்ட
கசாயங்களிடம் கட்டாயம் தோல்வியுறும்
அதிநவீன மருந்துகள்.
ரசாயங்களை விஞ்சும்
சாணக் கரைசலை மருந்தாக்கி
வீட்டு வாயிலில் தெளிப்பதில்
நுழையாதிருந்தன நுண்கிருமிகள்.
இவ்வாறாக
ஆயிரமாயிரமாய் இருந்தன
அறிவியலின் விழுமியங்கள்
'அ'ன்னா 'ஆ'வன்னா அறிந்திடாத
முன்னோர்களின் மூளைகளில்.
பாவையர் மலர்- பிப்ரவரி 2012 இதழுக்காக நடத்திய "அறிவியல் ஆயிரம்"
கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை.
Wednesday, February 15, 2012
நட்பின் அரிதாரம்
பச்சையம் தவிர்க்கும்
கலப்பின தாவரமென
விலக்க முயல்கிறேன்
உன்னோடு வாய்த்த என தந்த பொழுதுகளை.
கண்ணுக்கு புலப்படும் தொலைவில்
நிராதரவுற்று நிற்கும் தனிமை
வெம்மையின் கணைகளை தொடுத்தபடி
சுமைகூட்டிக் கொண்டிருக்கிறது
கனத்திருந்த மனப்பரப்பை.
சங்கடங்களினூடே
குற்றவுணர்வுகளால் ததும்புகிறது
தளர்வை புறந்தள்ளி
இறுக்கமுற்ற இதயம்
நிரந்தரமின்மைகளின்
சுவடுகளை தொட்டசைத்தவாறு
பற்றிக் கொள்ள முயலும்
எனதான கரங்களை உதறியபடி
துகளென துளிர்த்து
கடலென பெருக முயல்கிறது
அகோரப் பசியுற்றிருக்கும்
என் மீதான உன் பகைமை
நட்பின் அரிதாரம் பூசி.
ச.கோபிநாத்
நன்றி : வடக்கு வாசல் இணையதளம்
Subscribe to:
Posts (Atom)