Saturday, July 6, 2013

"குழந்தைகளைத் தேடும் கடவுள்" நூல் விமர்சனம்

புதுவை மாந்தன் இதழில் இடம்பெற்ற எனது "குழந்தைகளைத் தேடும் கடவுள்" நூல் விமர்சனம்

நன்றி -  திரு. ஆண்டோ, ஆசிரியர், மாந்தன் இதழ்


குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் விமர்சனம் - முனைவென்றி நா. சுரேஷ்குமார்



குழந்தைகளைத் தேடும் கடவுள்

நூலின் ஆசிரியர்: கவிஞர் ச. கோபிநாத்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இந்நூல் கவிஞரின் இரண்டாவது நூலாகும். இந்நூலில் பல்வேறு கருப்பொருள்களில் ஹைக்கூ கவிதைகளை செறிவுடன் படைத்துள்ளார். 

‘கோடுகள் நெளியும் கோலம் 
நிமிர்ந்து நின்றது 
அம்மாவின் கலைத்திறன்’

தாய்மார்களின் கலைத்திறனை, அவர்களின் உழைப்பை உணர்த்துகிறது. 

தான் ஒரு ஆசிரியர் என்பதால் மனனக் கல்விமுறையைப் பற்றி காட்சிப் படுத்தியுள்ளார். 

தாய் தந்தையர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு மட்டுமே பெற்றோர்களாக இருக்க முடியும். ஆனால் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் கோடான கோடிக் குழந்தைகளுக்கும் தாயாய்த் தந்தையாய் விளங்கக் கூடியவர்கள். அதனாலேயே பள்ளி ஆசிரியரான கவிஞரும் குழந்தைகளைப் பற்றிய கவிதைகளை யாத்துள்ளார். 

அறிவியல் சாதனங்களால் விளையும் தீமைகள், பூமி வறட்சியின் விளைவு, தனிக்குடித்தன வாழ்க்கையைப் பற்றி, நன்றி மறக்காத நாய்களைப் பற்றி என காட்சிகளை நம் கண்முன்னே தருகிறார் தன்னுடைய ஹைக்கூகளின் வழியே.

‘பசுவின் காம்பில் 
இனிதே சுரக்கிறது 
தாய்மை’

பசுவின் காம்பில் பால்தான் சுரக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். கவிஞரின் பார்வையில் தாய்மை புலப்படுகிறது. 

காதலைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். 

‘நம்மை அறிந்தே 
நாம் தொலையும் உலகம் 
காதல்’

தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கும் வறட்சிக்கும்  இராமநாதபுரம் மாவட்டத்தையே உதாரணமாகச் சொல்லுவார்கள். இன்றும் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில்,

‘வீணாகவில்லை 
குழாயில் ஒழுகும் நீர்
தாகம் தணிக்கும் பறவை’

என்ற ஹைக்கூ, பறவையைப் பாடுகிறது. இப்படி வீணாகிறதே தண்ணீர் என்று சொல்ல முற்படுபவர்கள் முன் தாகம் தணிக்கும் பறவையைக் கண்டு அப்படி சொல்லாமலேயே சென்று விடுவார்கள். 

ஜாதிகளைக் கண்டு கொதித்தெழுகிறார் இப்படி.

‘நாகரீக மனிதன் 
நாற்றமெடுகிறது 
ஜாதிய மணம்’

மூட நம்பிக்கைகளைப் பற்றி, காணாமல்ப் போன தமிழர் விளையாட்டுகள் பற்றி என தன் ஹைக்கூ கவிதைகளால் வாசர்கள் மனம் நிறைக்கிறார். 

மொத்தத்தில், குழந்தைகளைத் தேடும் கடவுள் – சமூக நலனைத் தேடும் மனிதன்.

நன்றி - முனைவென்றி நா. சுரேஷ்குமார்

Tuesday, June 18, 2013


சுழல் மே 2013 இதழில் இடம்பெற்ற எனது ஹைக்கூ.....

அன்பின் நிழல்
இளைப்பாறத் துடிக்கிறது
அழிவின் விளிம்பிலுள்ள மரம்

சுள்ளி சுமக்கும் பறவை
யாருக்காகவோ கட்டுகிறது
உயிர் வளர்க்கும் கூடு

உடைபடும் மூங்கில்
இசையை இழந்தது
இயற்கை

காற்றுக்கு அசையும் மரம்
மனதில் பதிந்தது
நியூட்டனின் மூன்றாம் விதி

கலங்க மறுக்கும் நீர்
வெண்ணிற நிழலாய்
நிலவின் பிம்பம்

குழந்தைகள் குளிக்கும் நதி
பெருக்கெடுத்தது
மகிழ்ச்சி வெள்ளம்

ஒரு கோப்பைத் தேனீர்
ஆவியாதலில்
களைப்பின் கணம்

தேடித் திரியும் மேகங்கள்
தொலைந்து போயின
மரங்கள்.

நன்றி -  சுழல் இதழ் & சுழல் ஆசிரியர் குழு

Thursday, May 30, 2013



சேலம் நுகர்வோர் குரல் அமைப்பின் ஆண்டு விழாவின்போது விழாத் 
தொகுப்புரை வழங்கியமைகாக திரு. டிராபிக் இராமசாமி அவர்களால் 
கெளரவிக்கப்படும்போது....

நன்றி - திரு. ஜெ.எம். பூபதி

Thursday, May 9, 2013



மாந்தன் மே 2013 இதழில் இடம்பெற்ற எனது ஹைக்கூ……

வியர்வை விதைக்கும் மனிதர்கள்
அறுவடைக்கு வந்தது
வாட்டியெடுக்கும் வறுமை

மாலை மலரும் நேரம்
மனதிற்கு இதமளித்தது
ஓய்ந்து கொண்டிருக்கும் கோடை

தனித்துப் பயணிக்கும் படகு
துணைக்கு சென்றன
நீரில் மிதக்கும் இலைகள்

மிகுந்திருக்கும் மனிதக் கூடுகள்
மரணப் படுக்கையில்
மரங்களை இழந்த மண்

புத்தக் பக்கங்களில்
சிறகொடியும் மனம்
தொலைந்த மயிலிறகு.

-    கவிஞர் ச. கோபிநாத்
சேலம்
9790231240 

Tuesday, April 30, 2013


உழைத்து களைத்த உடல்
உள்ளத்தில் எழுந்தது
சரியான கூலிக்கான ஆசை.

Weary body
Arisen in heart
Desire for the right wage.

பொறாமைப்படும் கண்ணாடி
சில நிமிட தரிசனமாய்
குழந்தையின் முகம்

Jealousy mirror
Darshan of a few minutes
The face of child

குழந்தைகள் இல்லாத வீடு
நுழைய மறுத்தது
காற்று

House with no children
Doorway denied
By the wind

மீளத் துடிக்கும் மனம்
மீண்டும் உயிர்பெறுகின்றன
நினைவுகள்

Desire to overcome
Getting rebirth
Memories

இலைகள் உதிர்ந்த மரம்
கிளைகளில் படர்ந்தது
வசந்தத்தின் வறட்சி

Leaves fallen tree
Spreaded in the branches
Drought of spring


கவிதையும் மொழியாக்கமும்
கவிஞர் ச. கோபிநாத்









Monday, April 29, 2013

இதழ்களில் வந்த எனது படைப்புகள்

அருவி ஜூலை – ஆகஸ்ட் – செப் 2012


சுழல் நவம்பர் 2012




 அருவி ஹைக்கூ சிறப்பிதழ் 2013



சுழல் ஏப்ரல் 2013