Monday, December 24, 2012
Sunday, December 16, 2012
குழந்தைகளைத்தேடும் கடவுள்
நூல் விமர்சனம்
நூல் விமர்சனம்
- எழுத்தாளர் ஐரேனிபுரம் பால்ராசய்யா
மனதைத் தொடும் ஹைக்கூ கவிதையோடு களம் இறங்கியிருக்கிறார் கவிஞர் ச.கோபிநாத். தனது குழந்தைகளைத்தேடும் கடவுள் என்ற இந்த இரண்டாவது கவிதைத்தொகுப்பு நூலின் மூலமாக பல வாசகர்களின் மனதைத் தொட்டிருக்கிறார்.
எளிமையான விஷயங்கள் கைக்கூவாய் இவரது பேனாவிலிருந்து புறப்பட்டு அது வாசகனை வந்தடையும்போது பிரமிக்க வைக்கிறது. இந்த இளைய படைப்பாளி குழந்தைகளின் வாழ்வியலை அழகாய் வடித்தாலும் சமுதாயத்தின் மீதுதான் அதிகமாய் தனது சாட்டையை சுழட்டியிருக்கிறார்.
குழந்தைகளின் கேள்விகள் ஆழமாய் கற்பித்தன புத்தகங்களில்லா உலக அறிவு
என்று குழந்தைகளைப்பற்றின அறிவுசார்ந்த கவிதைகளை வெறும் மூன்றே வரிகளில் முத்து முத்தாய் எழுதியிருப்பது நூலுக்கு மேலும் மேலும் அழகு சேர்க்கிறது.
சமுதாயப்பார்வையும் அதுசார்ந்த கவிதைகளும் நிஜங்களின் வலிகளை நியாயப்படுத்துகின்றன. உயிரினங்களின் உணர்வுகளை, பறவைகளின் ஏக்கங்களைக்கூட பதிவு செய்திருக்கிறார்.
திசை திரும்பின தாகத்துடன் பறவைகள் வறண்ட குளம்.
இப்படி முப்பது வரிகளில் சொல்லவேண்டிய விஷயங்களை வெறும் மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாய் சொல்லியிருப்பது அழகு.
வானத் தூரிகையின் வண்ண ஓவியம் அந்திப் பொழுது
என்று அந்திவானத்தின் அழகை மிகவும் அழகாய் ரசிக்கிறார்.
போதையேற்றும் அறிவியல் சாதனம் தொலைக்காட்சி
என்று சமூகத்தின் பண்பாட்டு சீரழிவுகளை அழகாகவே படம் பிடிக்கிறார் இந்த அழகிய கவிஞர் ச.கோபிநாத்.
எளிமையும் எதார்த்தமும் கொண்டு கவிதைகள் கவன ஈர்ப்பை பெறுவதால் எல்லோர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய கவிதைத்தொகுப்பு. இந்த குழந்தைகளைத் தேடும் கடவுள்.
வெளியீடு : வாசகன் பதிப்பகம்
Sunday, May 20, 2012
நூல் அறிமுகம்
குழந்தைகளைத் தேடும் கடவுள்
கலைத்திலகம், சகலகலா வித்தகர், முத்தமிழ் வித்தகர், நகைச்சுவை அரசு எனப்பல விருதுகளை இளவயதிலேயே பெற்றுள்ள கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் இரண்டாம் படைப்பாக வெளிவந்துள்ள இந்த ஹைக்கூ கவிதை நூல், தமிழிலக்கிய உலகில் தனக்கென தனியிடம் பிடிக்கும் என்பதும், பல பரிசுகளை பெறும் என்பதும் வளர்ந்த பலபடைப்பாளிகளின் கணிப்பு.
ஆங்கில ஆசிரியரான இவர் தமிழின் மீது கொண்ட தனியாக்காதலாலும் குழந்தைகளோடான தன் வாழ்வியல் அனுபவங்களைப் பதிவு செய்யும் நோக்கிலும் எழுதியுள்ள இந்நூலின் ஹைக்கூக்களுக்கு பொருத்தமான கோட்டோவியங்கள் இடம்பெற்று சிறப்பு சேர்க்கிறது "குழந்தைகளைத் தேடும் கடவுள்".
சிறப்பான வடிவமைப்பு, அருமையான ஓவியங்கள், அழகுபடுத்தும் அணிந்துரைகள் எனப்பலவற்றால் உயிர்த்தெழுகிறது இந்நூல்.
96 பக்கங்கள்
விலை ரூ. 50 -
நூல் தேவைக்கு
கவிஞர் ச.கோபிநாத்
9790231240
Friday, April 27, 2012
தவறுதலால் கிடைத்த பலன்
தூரத்து உறவினரின்
மரணச் செய்தியை
சுமந்து வந்ததாக இருக்கலாம்.
பள்ளிக் கால நண்பன்
தொடர்பைத் தேடிப் பிடித்து
அழைக்க முயன்றதாக இருக்கலாம்.
பரிசு கிடைத்திருப்பதற்காகவோ
காப்பீட்டுக்கு விளக்கம் தரவோ
கார்பரேட் கணவான்கள்
அறுக்க அழைத்ததாக இருக்கலாம்.
கவிதைகளை வாசித்த
பரந்த இதயம் கொண்ட யாரேனும்
பாராட்டுவதற்கு அழைத்ததாகவும் இருக்கலாம்.
புதிய தொடர்பெண்ணை சுமந்தபடி
அலைபேசி அழைத்துக் கொண்டிருந்த
சில நொடிகளுக்குள்
பல நூறு எண்ணங்களை
அனுமானித்துக் கொண்டிருக்கையில்
வந்த அழைப்பு
தவறிய அழைப்பு ஆகியிருந்தது.
புதிய தொடர்பொன்றை
சுமக்கத் தொடங்கியிருந்தது அலைபேசி.
ச.கோபிநாத்
நன்றி
வடக்கு வாசல்
ஏப்ரல் 2012 இதழ்
Subscribe to:
Posts (Atom)






