Saturday, March 5, 2011




விரிவடையும் சாலை
விழுங்கப்படும் விளைநிலங்கள்
வளர்ச்சிப்பாதையில் இந்தியா

ச‌.கோபிநாத்

நன்றி : வாலிதாசன் குறுஞ்செய்தி இதழ்

Wednesday, March 2, 2011




பேதைமை


அடர்வனமொன்றில்
இலைகளிடையே நுழைந்துத் தரைதொடும்
சூரியக் கதிர்களின் துணைக் கொண்டு தேடி அலைகிறேன்.
புலப்படாத புதருக்குள் சென்று மறைந்தவாறே
முகம்காட்டி என்னை அழைக்கிறது
நடையைத் துரிதப்படுத்த
ஓடியவாறே இருக்கிறது
பருத்தியென மேனிக்கொண்ட முயல்
கைகளுக்கு எட்டும் தூரத்திலிடிருந்தும்
அதன் போக்கில் விட்டு விளையாடித் தொடர்கிறேன்
ஏதுமறியா குழந்தையென.

ச.கோபிநாத்

நன்றி : வடக்கு வாசல் இதழ் மற்றும் இணையதளம்

Monday, February 28, 2011








வழியனுப்புதல்

"டாட்டா" காட்டுவதால்
பெரியதாய் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை
எனினும்,
ஏதோ இழந்தவாறு
உணர நேர்கிறது
"டாட்டா" காட்ட மறுத்தபடி
வழியனுப்பும் குழந்தையின் செய்கையால்..!

-ச.கோபிநாத்.

நன்றி
நீலநிலா வலைப்பூ மற்றும் இதழ்

Tuesday, November 16, 2010



சிலிர்க்கும் உடல்
சாரலடிக்கத் துவங்கியது
மழை

Wednesday, June 16, 2010

அன்புள்ள அப்பாவுக்கு...

எதுவுமற்றபடி தென்படும்
எனதான கிறுக்கல்களை
ஓவியங்களென மெச்சி புகழ்வதில்
தொடங்குகிறது தந்தை உதிர்க்கும் பொய்கள்.

மூச்சிறைக்க மிதிபட்டு
மணியோசையினூடே இழைத்து தேயும்
மிதிவண்டி அறிந்திருக்கக்கூடும்
தந்தையின் பணிபளுவை....

அறியாப் பிள்ளையென செய்த தவறுகளுக்கு
பரிந்துரைத்ததில் தொடங்கி
பட்டதாரியென முகிழ்த்து நிற்கும்
எனதான வளர்ச்சிக்கு உரித்தான
அவரின் செயல்பாடுகளை
விசும்பல்களினூடே கடுகடுக்கும்
எனதுதடுகள் உமிழும் சொற்சுமைகள்.

குஞ்சுப்பறவைக்கு உணவூட்டி மகிழும்
தாய்ப்பறவையின் பகிர்தலையொத்தபடி
பிரியத்தின் சுனை நிரம்பி
வழிந்தோடும் அவருடைய தான ஸ்பரிசம்.

சூழ்ந்த மரங்களினூடே மலரும் வசந்தமென
படர்ந்த அக்கறையின் புனிதத்தை
துட்சமென தகர்த்த எனதுதடுகள்
கருணையின் வேடம் தரித்துமிழும்
என்ற வார்த்தைகளை...

ச.கோபிநாத்

Tuesday, May 12, 2009

உன்னுடையதான அறை

தனிமையில் திளைத்திருந்த வேளையில்
யதார்த்தமாய நுழைய நேரிட்டது
உனது அறையில்.

முரண்பாடுகள் நிறைந்த‌
உனது தூக்கத்தை
அறையின் மெத்தைவிரிப்புகள்
அடையாளப்படுத்தின.

அந்தரங்கம் தொனித்து காணப்பட்ட‌
உனது ஆடைகள்
கண்டறியாத பலவற்றை
உயிர்ப்பித்தன.

உன் இதழ்களின் இனிமையை சுட்டிக்காட்ட
ஒற்றை துளி தேநீர் மட்டும்
ஒட்டிக் கொண்டிருந்தது
தேநீர் கோப்பையில்
எனக்காக...

ரசனை மிகுந்த
உனது வாசிப்புகளை
அடையாளம் காட்டின‌
விரிந்து கிடந்த புத்தகங்கள்.

உன்னோடு வாய்க்காத பொழுதை
உனதான நினைவுகளோடும்
நிஜங்களோடும்
உயிர்பித்து உணர்ந்தேன்
உனது அறையில்....
நானும் அதுவும்

அங்கும் இங்குமாய் அலைந்து
ஓரிடத்தில் தஞ்சம் புகுந்துவிடுகின்றது அது.
வெகு சீக்கிரத்தில்
ஒட்டிக் கொள்வதில்லையெனினும்
முயற்சித்தபடி இருக்கிறது.
கீச்சலிட்டும் குளைத்தும்
பயப்படுவதாய் அடையாளப்படுத்த முயன்றாலும்
எனக்கிடையேயான அதன் முதல் சந்திப்பில்
காலங்களையும் வெளிகளையும் கடந்து
மெல்ல நுழைந்து
இடம் அம்ர்ந்து கொண்டேன் அதனுலகில்
விடையளிக்க இயலாதெனினும்
பலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்
எனதான சினேகம் என்றெண்ணி அதனுடன்.
என்றேனும் சபிக்க நேரும் அக்கணத்தில்
எல்லைக்கடந்து திட்ட நேரும்
அதனுடனான உறவினை புறந்தள்ளி
''சீ, போ, நாயே....''' என்று
மனமுறுகி சூட்டி மகிழ்ந்து அழைத அதன்
செல்லப்பெயரையும் கடந்து.