Friday, February 13, 2009

நினைவலைகள்

மெல்லிய இருள் படர்ந்த‌
கறுத்த மேகத்திற்கிடையேயானதொரு பொழுதில்
இழையோடியபடியிருக்கும் எனதான தனிமை
மெளனித்திருந்த வேளையுடன்.

ஓயாமல் சிறகடிக்கும்
முடிச்சுகளிடையே உடலைத் தாங்கிய‌
தட்டான்களையொத்தபடி
தனித்த அறையொன்றின் வாயில் வழியே
பாய்ந்து தழும்பி வழியும்
உனதான அந்தரங்கங்களை
அறிய துடிக்குமென் ஆவல்கள்
வரம்புகளின் எல்லை கடந்து.

சிலிர்த்தெழ செய்யும் நியாபக சுவடுகளை
கட்டவிழ்த்தபடி கடக்கிறது
நேயத்தின் பொருட்டு காத்திருந்த‌
சினேகிதனொருவனின் அழைப்புகள்.

மேலெழும்பி அடங்குகிறது
காலத்தோடிணைந்த நினைவலைகள்
மழைநீர் படுதலின் விளைவாயு
கரையும் மண் மேடென....

Thursday, February 12, 2009

கனவுகளுடனான இரவுப்பொழுதுகள்


அற்பக்கனவுகளினூடே அல்லாடுகிறது

என் இரவுப்பொழுதுகள்.

பொறாமையுடனான

குரூரம் ததும்பியும்

நேயம் நிறைந்தும்

எத்தனிக்கின்றன அவை.

அச்சமுற செய்யும்

என்னுள் நிகழும் அக்கனவுகளை

விலக்க முனைந்து

தோல்வியுறுகிறேன்

இயலாமையின் வேடம் தரிக்கும் அற்பனென

கனவுகளின் பிரதிபலிப்பினூடே.

நன்றி : வடக்கு வாசல் (பிப்ரவரி 2009)

Monday, February 9, 2009


என்னுள்ளான நேசம்

முன்னெப்போதும் நிகழ்ந்திரா இக்கணத்தில்
என்னுள்ளுறைகிறது
அவ்விருப்பம்.

தருணங்களனைத்திலும் கடிந்துகொண்டவாறே
நீண்டு
நெடிந்தேயிருக்கிறது

எனதுள்ளத்தினுள்
தாழிட்டுக்கொண்டும்

வெளிவர
மறுத்தபடியும்
அடைக்காக்கும்
அந்நேசம்.


பேரோசை எழுப்பியபடி அனுமானிக்கிறது

நடுங்கிப் பிளவுற்றிருக்கும்
எனதந்த
மனதினுள்ளுயரும் புன்னகை நெருக்கடிக்குள்ளான பொழுதொன்றில்.

பிறிதொருவரின் கரம் அரவணைக்கத் தயாராயிருப்பதாய்
அழுகிய நாற்றமெடுக்கும் பிணமொன்றை முன்னிறுத்தி
கசகசப்பும் அருவருப்புமாய் உரூப்பெறுகிறது
வெளிக்காட்டாமலிருந்த பிறர்மீதான எனதந்நேசம்.

Monday, December 15, 2008


துணை

காரணிகளேதுமின்றி
பிந்தொடர்கிறது நமதந்த உறவை

சிதைத்த பிணக்கங்கள்
வலியப் பேசுவது
நமதானவற்றை நாணமுறச்
செய்துவிடுமென்ற எண்ணத்தினூடே
கடக்கிறது நமதிந்த பிரிவு.

எனைவிடுத்து நீயும்

உனைவிடுத்து நானும்

பிரிந்திருக்கும் இக்கணம்

மெல்லக் கடக்கிறது

தனித்த அறையொன்றின் துணையுடன்.

Sunday, December 14, 2008


மழைக்காலப் பொழுது

கருத்த மேகங்களினூடே

துளிர்த்து பெருகும் மழையினை

தவிர்த்தொதுக்கி மேலெழுகிறது குடை.

எனக்குள் உறையும் உனதன்பையும்
உனதன்பை தாங்கிய உனதுள்ளத்தையும்
நனைவுற்றிடாமல் காக்கும் பொருட்டு...

வாக்குறுதிகள்

நமதிடையேயான நட்பை
விரிசலுற செய்தபடி
முகம்காட்டி மகிழ்வுறுகிறது

இளகமறுக்கும் இதயத்தை
சிதைவிறசெய்தபடி மேலெழும்பும்
நிறைவுறா வாக்குறுதிகள்

நம்பிக்கையின் தடம்

கழுகொன்றின் பார்வைக்கு

புலப்பட்ட சர்ப்பமென
போராட்டதினூடே கழிகிறது

எனதிந்த நாட்கள்
நாளைக்கேனும்....
என்றபடி கடந்த நேற்றை தகர்த்தபடி
இன்றும் நிகழ்கிறது
எனதந்த நம்பிக்கையின் தடம்
......